Saturday, January 28, 2012

சிம்புவின் எக்ஸ்ட்ரா க்ளாஸஸ்

என் பையனைப் பொறுத்தவரைக்கும் ஸ்கூலிலிருந்து வந்தவுடனே கான்வர்ஸேஷன் வகுப்பு,ஸ்கூல் வொர்க் பண்ண,ஸ்டடி பண்ண ஒரு ட்யூஷன், தமிழுக்கு ஒரு டியூஷன் - இப்படி 3 ட்யூஷன் போறான். கர்நாடக சங்கீதம் கத்துக்கறான். ஒரு நாள் விட்டு ஒரு நாள் கராத்தே வகுப்பு, ஜிம்னாஸ்டிக்ஸ் வகுப்பு, தலைகீழா நடப்பான், சம்மர்ஸால்ட் அடிப்பான். பின்பாக பல்டி அடிப்பான். சனி ஞாயிறில் சினிமா பைட்டிங் கத்துக்கறான். கம்புச்சண்டை, மான் கொம்புச்சண்டை, குத்துச்சண்டை அதுக்கான மாஸ்டர் வச்சு கத்து தர்றேன். அப்புறம் டான்ஸ் வகுப்பு.

----- 1990ல் குமுதத்தில் டி.ராஜேந்தரின் பேட்டி. இந்த அளவுக்கு ஒரு பிள்ளையை வதைக்க வேண்டுமா? இவர் நார்வேயில் இருந்திருந்தால் சிம்புவை அரசுதான் வளர்த்திருக்கும். சமீபத்தில் நார்வேயிலிருக்கும் ஒரு இந்தியத்தம்பதியின் குழந்தைகளை அவர்கள் சரியாக வளர்க்கவில்லை என்று சொல்லி (3 வயது பையன் இன்னும் அப்பாவோடு தூங்குகிறான், கையால் சாப்பாடு கொடுக்கிறார்கள்-ஸ்பூன் பயன்படுத்துவதில்லை) நார்வே அரசாங்கம் அந்தப்பிள்ளைகளை அதுவே எடுத்து வளர்க்கிறது. இந்தக்காரணங்கள் நமக்கு மிகவும் அபத்தமாக இருக்கின்றன. ஆனால் சமீபத்தில் Amy Chua என்ற சீனப்பெண் எழுதிய Tiger Mom என்ற நாவல் மேற்கத்திய உலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சீனர்களின் குழந்தை வளர்ப்புமுறை பெரும்பாலும் நம் முறையை ஒத்துள்ளது. எனவே அவருடைய புத்தகத்தில் அவர் குழந்தையை அவர் வளர்த்தவிதம் குறித்து தெரிவித்துள்ள கருத்துகளில் ஏதும் தவறிருப்பதாக எனக்குத் தெரியவில்லை. (டி.ஆர் அளவுக்கு நிச்சயமாக பிள்ளைகளை வதைக்கக்கூடாது என்றாலும்கூட குழந்தைகள் தவறு செய்தால் அடித்து திருத்துவது, மியுசிக் வகுப்புகளைக் கட்டாயமாக்குவது போன்றவை). குழந்தையை அடிப்பதா என்கிறார்கள் மேற்கத்தியர்கள் - கையால் சாப்பாடு கொடுப்பது பெரிய குத்தமா என்கிறோம் நாம்.

பிள்ளைகளை நல்வழிப்படுத்துவது பெற்றோரின் கடமை. அவர்களின் உடல் உள்ள ஆன்ம வளர்ச்சியைக் கவனத்தில் கொள்ள வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கு உள்ளது. எனினும் பிள்ளைகளின் வாழ்க்கையில் நம்முடைய எல்லையைப் பின்வரும் கிப்ரனின் வரிகள் கொண்டு வரைந்து கொள்வோம்.

Your Children are not your children.

They come through you and not from you.

though they are with you, they belong not to you.

You may give your love but not your thoughts..............................

உங்கள் குழந்தைகள் உங்களுடையவர்களல்ல.

அவர்கள் உங்கள் மூலமாக வருகிறார்கள் - உங்களிடமிருந்து அல்ல

அவர்கள் உங்களோடிருந்தாலும் உங்களுக்குரியவர்களல்ல

அவர்களுக்கு உங்கள் அன்பைக் கொடுக்கலாம் - உங்கள் எண்ணங்களை அல்ல

Friday, January 20, 2012

ஈஸ்ட்மேன் கோடக் நிறுவனம் திவாலாகும் நிலையில்

கோடக் நிறுவனம் ஜார்ஜ் ஈஸ்ட்மேனால் 1880ம் வருடம் நிறுவப்பட்டது. கைக்கேமரா, புகைப்பட நெகட்டிவ், தற்சமயம் முழுக்க முழுக்கப் பயன்படுத்தப்படும் டிஜிட்டல் காமெரா அனைத்தும் இவர்களின் கண்டுபிடிப்பே. 1100க்கும் அதிகமான பேடன்ட்டுகளையும் இவர்கள் வைத்துள்ளனர்.

புகைப்படத்துறையிலும், திரைப்படத்துறையிலும் கோலோச்சியவர்கள் இவர்கள். எம்ஜிஆர், சிவாஜி திரைப்படங்களை ஈஸ்ட்மேன் கலரில் என்று விளம்பரம் செய்த காலம் ஒன்றுண்டு. நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் நடந்தபோது தன்னுடன் ஒரு கோடக் காமெராவைத்தான் எடுத்துச்சென்றார். ஒரு காலத்தில் கிட்டத்தட்ட 64000 தொழிலாளர்களுடன் செயல்பட்டு வந்த நிறுவனம் இன்று 17000 தொழிலாளர்களுடன் தடுமாறிக்கொண்டிருக்கிறது. இதன் சந்தை மதிப்பும் சரிந்துவிட்டது.

இதன் வீழ்ச்சிக்குக் காரணமாக சொல்லப்படுவது, லேட்டஸ்ட் டெக்னாலஜிக்கு விரைவாக அடாப்ட் ஆகாததேயாகும். உதாரணமாக இவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட டிஜிட்டல் காமெரா தயாரிப்பில் இவர்களே முழுமூச்சாக ஈடுபடவில்லை. தற்சமயம் தங்கள்வசமிருக்கும் 1100 பேடண்ட்டுகளை விற்று நிலைமையைச் சமாளிக்க முயன்றுகொண்டிருக்கிறது இந்நிறுவனம்.

மாற்றம் ஒன்றே மாறாதது. இதை உணர்ந்து, ஏற்க மறுத்தால் ஜாம்பவன்களாய் இருந்தாலும் மண்ணைக் கவ்வ வேண்டியதுதான் என்பதே கோடக் நமக்கு சொல்லும் பாடம்.

Thursday, January 19, 2012

சீரக சம்பாவும் கோதுமையும் போதுமா? மல்லியும் ரோஜாவும் வேண்டாமா?

ஒரு கேள்வி கேட்கும் ட்ரெண்ட் இருக்கிறது. வாழ்க்கையின் சகல அங்கத்திலும் இது பரவியுள்ளது. சாப்பிடுவது, பார்ப்பது, கேட்பது, படிப்பது, எதையாவது கற்றுக்கொள்வது என்று அனைத்திலும். அது என்னவென்றால் - இதால் என்ன யூஸ் என்ற கேள்வி. தொடர்ந்து blog எழுதுகிறாயே - இதால் என்ன யூஸ்? அந்த நேரத்தில் இதை செய்யலாமே, அதை செய்யலாமே. பிள்ளைகள் பாடப்புத்தகம் தவிர மற்றதைப் படிப்பதால் என்ன யூஸ் - அதற்கு ஒலிம்பியாட்டுக்கு கோச் பண்ணலாமில்லையா? ப்ரண்டுடன் பேசிக்கொண்டிருந்தாயா - சரி, என்ன புதிதாக கற்றுக்கொண்டாய்? ப்ரெஞ்ச் படிக்க ஆசைப்படுகிறாயா - ஏதாவது வேலை வாய்ப்பு கிடைக்குமா அதிலிருந்து?

நாம் செய்யும் அனைத்துமே வயிற்றுப்பாட்டையும், சர்வைவல் திறனையும் மட்டுமே சார்ந்திருக்க வேண்டுமென்றால் கலையும், அழகும், இசையும் எதற்கு? வெறும் நெல்லை மட்டும் பயிரிட்டால் போதுமா? இவ்வுலகை அழகாக்க, மனதை மணமுள்ளதாக்க மல்லி வேண்டாமா? எதைச் செய்தாலும் monetary benefits, பொருள் ரீதியான ஆதாயம் கிடைக்க வேண்டுமென்ற அவசியமில்லை. சில காரியங்களை அதைச் செய்ய வேண்டும் என்பதற்காக மட்டுமேவும் செய்வோம். அப்படிப்பட்ட காரியங்களாலேயே மனிதம் தழைக்கிறது.

Wednesday, January 18, 2012

தனுஷின் ஹைப்பர்கேமி பிரச்சனைகள்



சமீபத்தில் ஒரு பத்திரிக்கையில் ஐஸ்வர்யா, சவுந்தர்யா, தனுஷ் ஆகியோர் ரஜினியின் புகழைப் பயன்படுத்தி ஆதாயம் அடைய முற்படுவதாக ஒரு செய்தி வெளியாகியிருந்தது. இதில் ஐஸ்வர்யா, சவுந்தர்யாவை சொல்வது சரிதான். ரஜினியின் மகள் என்ற பேனர் இல்லாமல், ஐஸ்வர்யாவால் டைரக்ஷன் சான்ஸ் வாங்கமுடியுமா? அல்லது சவுந்தர்யாவால்தான் இந்த அனிமேஷன் வாய்ப்புகளைப் பெற முடியுமா?



ஆனால் தனுஷின் நிலையே வேறு. அவர் ஐஸ்வர்யாவைத் திருமணம் செய்வதற்கு முன்பே 3 ஹிட் படங்களைக் கொடுத்துவிட்டார். நேஷனல் அவார்ட் வாங்கியிருக்கும் திறமையான நடிகர். இவற்றுக்கும் இவர் ரஜினியின் மருமகன் என்பதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. ரஜினியின் பெயரைப் பயன்படுத்தி முன்னுக்கு வரவேண்டிய கட்டாயத்தில் அவர் இல்லை. இருப்பினும் அவர் ரஜினியின் மருமகனாக பார்க்கப்படுவதான உணர்வு அவருக்கு எப்போதும் இருக்கிறது. (சினிமாவில் நீங்கள் ரஜினியின் வாரிசா? - இல்லை நான் கஸ்தூரிராஜாவின் வாரிசு). பெப்சி உமா ஷோவில் திருமணமான புதிதில் - ஐஸ்வர்யா எப்படி இருக்காங்க? - ஏன் அவங்களப் பத்தியே கேக்குறீங்க. என் அம்மா அப்பா அண்ணா பத்தி கேளுங்க -புதுசா கல்யாணமான எந்த ஆணிடமும் மனைவியைப் பத்திதான் கேப்பாங்க தனுஷ். இது நீங்கள் ரஜினி மகளைத் திருமணம் செய்ததால் வந்த கேள்வி அல்ல.

தனுஷ் எப்போதும் இப்படியொரு தன்னுணர்வுடன் இருப்பதற்கு ஹைப்பர்கேமி தான் காரணம் - அதாவது நம்மை விட வசதியானவர் வீட்டில் பெண்ணெடுப்பது. எப்படி பார்த்தாலும் தற்சமயம் பொருளாதார ரீதியில் ரஜினியை விட தனுஷ் குறைவுதான். இதே தனுஷ் கமலஹாசனின் மகனாகவோ அல்லது ஒரு பெரிய குடும்பத்து - ஏவிஎம், டிவிஎஸ் etc etc - பிள்ளையாகவோ இருந்தால் யாரும் தனுஷை மாமனார் பெயரைப் பயன்படுத்துவதாக குறை சொல்லமாட்டார்கள்.

தனுஷ் இப்படியொரு ஹைப்பர்கேமி காம்ப்ளக்ஸில் தவிக்க வேண்டியதில்லை. கொலவெறி வெற்றிக்குப்பின் ஒரு வட இந்திய பேட்டியில் அவர் சொல்கிறார் - நல்ல வேளை இனிமேல் யாரும் என்னை ரஜினியின் மருமகன் என்று அடையாளப்படுத்த மாட்டார்கள். கவலைப்படாதீர்கள் தனுஷ் - உங்கள் திருமணத்திற்கு முன்னரே நீங்கள் உங்களை நிருபித்துவிட்டீர்கள்.

Tuesday, January 17, 2012

எப்போதும் சந்தோஷமாயிருக்க எளிய வழிகள்

கற்கால மனிதர்களின் வாழ்வியல் சூழல் - எப்போதும் ஆபத்து நேரலாம். அதனால் எந்நேரமும் தயாராயிருக்க வேண்டும் - என்ற மனநிலையிலேயே அவர்களை வைத்திருந்தது. இயற்கைச் சீற்றங்களால், வனவிலங்குகளால், நோய்களால், உணவு பற்றாக்குறையால் என்று அவர்கள் எப்போதும் மனதளவில் பிரச்சனைகளை எதிர்நோக்க தயாராயிருக்கவேண்டிய கட்டாயத்தில் இருந்திருக்கின்றனர். இப்போது வாழ்வியல் சூழல் முற்றிலும் மாறியிருக்கிறது. பரிணாம வளர்ச்சியில் உடல் மாற்றம் அடைந்திருக்கிறது - மனம்? நிச்சயமாக இல்லை. எல்லாம் நிறைவாக இருக்கும் வேளையிலும் மனம் ஏதோவொரு முகம் தெரியா ஆபத்தைப் பற்றிய கற்பனை பயத்தில், கவலையில் உழல்கிறது. மனம் தீப்பந்தம் போல் கொழுந்துவிட்டெரியும் சூழ்நிலையிலும், கவலை மேகங்கள் அதைச் சூழ ஒரு நொடி போதும். மனதை அடக்கி அதனை எப்போதும் சந்தோஷம் கொண்டிருக்கச்செய்ய எளிய வழிகள் இவை -

1. ஒப்பிடாதீர்கள் - பேஸ்புக் ஸ்டேட்டஸில் ஆல்ப்ஸ் மலை அடிவாரத்திலிருந்து, லக்ஸுரி க்ருய்ஸில், லண்டன் வீதியில் போன்ற அப்டேட்டுகளைப் பார்க்கும்போது நாம் மெட்ராஸ் மொட்டை வெயிலில், HOD tortureல் என்று தான் status update செய்யவேண்டியிருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்களேன். அதற்காக கவலைகொள்ளாதீர்கள். ஒவ்வொருவருடைய வாழ்க்கையின் போக்கும், அர்த்தமும் வேறு. மற்றவர்களோடு நம்மை கம்ப்பேர் செய்வது மனக்கஷ்டத்துக்குத்தான் வழிவகுக்கும். அவ்வாறு ஒப்பீடுகள் வரக்கூடிய சந்தர்ப்பங்களைத் தவிருங்கள். 2. சின்ன விஷயங்களிலும் சந்தோஷமடையுங்கள். உதாரணமாக இந்த மென்பனிக்காலத்தின் காலையில் அருந்தும் அருமையான ஒரு கப் காபி, இளையராஜாவின் ஜெயா டிவி ஷோ etc, etc... வாழ்க்கை கடுமையானது. மகிழ்ச்சியாயிருக்க காரணங்களைக் கண்டுபிடியுங்கள்.

3. நன்றியுள்ளவர்களாயிருக்கப் பழகுவோம். எத்தனையோ பேர் எதுவமேயில்லாமலிருக்கும்போது, நான் இதைக் கணினியில் டைப் செய்யவும், அதை நீங்கள் வாசிக்கவும் சந்தர்ப்பம் கொடுத்த இறைவனுக்கு நன்றி.

4. தேவைப்படுபவர்களுக்கு இயன்ற உதவியைச் செய்வோம். பின் வருவது ஒரு நல்ல ஆர்கனைசேஷன். முடிந்தால் அவர்களோடு உங்களை இணைத்துக்கொள்ளுங்கள். ஒருபோதும் திருப்பிச்செலுத்தமுடியாத வகையிலான உதவிகளைச் செய்யுங்கள். www.chennaisocialservice.org, Mr.Sivakumar : 9941014591. இதில் கிடைக்கும் மனநிறைவும் சந்தோஷமும் வேறெதிலும் இல்லை.

5. இறுதியாக இறைவனின் திருவடியை இறுகப்பற்றிக்கொள்வோம். ஒன்றை நினைத்து ஒன்றை மறந்து ஒடும் மனம் எல்லாம் நீயென்றறிந்தால் எங்கே இயங்கும் பராபரமே என்னும் தாயுமானவரின் என்றும் நினைவில் இருத்துவோம்

Friday, January 13, 2012

சென்னையில் அப்பார்ட்மெண்ட் வாங்கப்போகிறீர்களா - ஹிட்டன் காஸ்ட்டுக்கு பில்டர்களின் புது டெக்னிக்ஸ்

சென்னையின் ரியல் எஸ்டேட் பிசினஸ் நல்ல லாபத்தில் இயங்குவதாகச் சொல்கிறார்கள். சென்னை இப்போது க்ரேட்டர் சென்னையாக மாறியதால் புறநகர்களில் நிறையப் பகுதிகள் சிட்டி லிமிட்ஸுக்குள் வந்து விட்டன. அதனால் தென்சென்னை பகுதியில் புழுதிவாக்கம், உள்ளகரம், ஆலந்தூர், பள்ளிக்கரணை, பெரும்பாக்கம் போன்ற ஏரியாக்களில் அப்பார்ட்மெண்ட்டுகளின் விலை எகிறிவிட்டது. 20,25 வருடங்களுக்கு முன் அங்கே நிலம் 1 கிரவுண்டு ரூ.10000-20000 என்று வாங்கிப்போட்டவர்களெல்லாம் இன்று கோடீஸ்வரர்கள். இப்படிப்பட்ட நில உரிமையாளர்களும் இன்று திடீர் பில்டர்களாக அவதாரம் எடுத்து அப்பார்ட்மெண்ட் கட்டி விற்க துவங்கிவிட்டார்கள்.

வீடு வாங்குபவர்கள் ப்ரொபஷனல் பில்டர்களிடம் வாங்காமல் இப்படிப்பட்ட திடீர் பில்டர்களிடம் மாட்டிக்கொண்டோம் என்றால் தொலைந்தோம். சில ப்ரொபஷனல் பில்டர்களிடமும் ட்ராபேக்ஸ் இருக்கலாம். ஆனால் இது என் மற்றும் என் நண்பர்களின் சொந்த அனுபவம். Hidden costs list பின் வருமாறு -


1.இந்த கார்ப்பெட் ஏரியா, ப்ளிந்த் ஏரியா,காமன் ஏரியா களேபரங்களில் நீங்கள் வாங்கும் வீட்டின் மொத்த அளவில் இருந்து கார்ப்பெட் ஏரியா 20% மட்டுமே குறைவாக இருந்தால் உங்கள் பில்டர் உங்களை ஏமாற்றவில்லை. உதாரணமாக நீங்கள் 850 சதுரடியில் வீடு வாங்கினீர்கள் என்றால் உங்கள் கார்ப்பெட் ஏரியா குறைந்தபட்சம் 680 சதுரடியாக இருக்க வேண்டும். கார் பார்க்கிற்குத் தனியாக 1 - 1.5 லட்சம் வாங்குவார்கள். ஆனால் இப்போது கார் பார்க்கிங் ஏரியாவையும் வீட்டின் அளவோடு சேர்த்துவிடுகிறார்கள். எங்கள் வீட்டின் கார் பார்க் ஏரியா 60சதுரடி. ஒரு சதுரடியின் விலை ரூ.3500. எனவே நாங்கள் கார் பார்க்கிங்குக்கு கொடுத்த தொகை ரூ.210000 - கிட்டத்தட்ட குறைந்தபட்சம் ரூ.60000 எக்ஸ்ட்ரா.

2. வீட்டுக்கு டைல்ஸ் போடும் நேரத்தில் ஒரு டைலுக்கு ரூ.40 தான் தருவேன் என்பார் பில்டர். மேற்கொண்டு ஆவதை நாம் தான் செலவழிக்க வேண்டும். ஒரு டைல் ரூ.100க்காவது வாங்கினால்தான் தரமானதாக இருக்கும். 800 சதுரடிக்கு ஆகும் டைல்ஸ் செலவு - ரூ80000. இதில் பில்டர் தருவது ரூ.32000 மட்டுமே. நமக்கு ஆகும் எக்ஸ்ட்ரா ரூ50000. மேலும் குழாய் இணைப்புகள், வாஷ்பேசின் அனைத்துக்குமே இருப்பதிலேயே லோ காஸ்ட் ஐட்டங்கள்தான் தருவோம் என்பார் (இந்த கண்டிஷன் எதையுமே நீங்கள் வீடு புக் செய்வதற்கு முன் சொல்லமாட்டார்). இவற்றுக்கு எப்படியும் ரூ. 30000 எக்ஸ்ட்ரா.

3.வீட்டில் ஒரு ஸ்விட்ச் போர்டு அதிகம் கேட்டால் கூட ஒரு ஸ்விட்ச் 20 ரூபாய் என்று கணக்கு சொல்வார். நாம் விதியை நொந்து கொண்டு கொடுக்கவேண்டியதுதான்.

4. என்ன பணம் கொடுத்தாலும் பில் உடனே வாங்கிக்கொள்ளுங்கள். சாயந்தரம் வாங்கிக்கொள்ளலாம் என்று நினைக்காதீர்கள் - எவ்வளவு அவசரத்திலிருந்தாலும் பரவாயில்லை. என் தோழி கவுரவமான உயர்தொழிலில் இருப்பவர். அவர் ரூ.5000த்திற்கு பில் அப்புறம் வாங்கிக்கொள்ளலாம் என்று இருந்துவிட்டார். பில்டர் நீங்கள் 5000 ரூபாய் தரவேயில்லை என்று சொல்லி மேற்கொண்டு 5000 வாங்கிவிட்டார். இவ்வாற் நாம் 5000 ஏமாந்து, அவரை 5000 ரூபாய்க்கு ஏமாற்றியதாக அவப்பெயரையும் வாங்கிக்கட்டிக்கொள்ளவேண்டியதுதான்.

இப்படி அப்படி என்று ரூ2 லட்சம் எக்ஸ்ட்ரா கறந்துவிடுவர். அத்துடன் மிகவும் மரியாதைக்குறைவான, நம்பிக்கையற்ற ட்ரீட்மெண்ட் நமக்கு கிடைக்கும். இந்த மாதிரி மோசமான அனுபவம் நல்ல established, professional பில்டரிடம் எங்களுக்கு ஏற்படவேயில்லை. வீடு வாங்குவது அனேகருக்கு வாழ்நாள் கனவு. வாங்கும் முன் பில்டரையும் கவனியுங்கள்.

Monday, January 9, 2012

ஒரு நற்செய்தி - புத்தகக்கண்காட்சியில் பூந்தளிர் அமர்சித்திரக்கதை தமிழில் கிடைக்கிறது

35ம் புத்தகக்கண்காட்சி சென்னையில் கோலாகலமாக நடந்து கொண்டிருக்கிறது. ஒரு மிக மகிழ்ச்சியைத் தந்த விஷயம் - கிழக்கு பதிப்பகம் ஸ்டாலில் அமர் சித்திரக்கதை தமிழில் கிடைக்கிறது.







அந்தப்புத்தகங்களின் அட்டையைப் பார்க்கும்போது, நாம் படித்த கல்லூரிக்கு செல்லும் போது , ஆத்மார்த்தமான நண்பனை நீண்ட நாட்கள் கழித்துப்பார்க்கும்போது, நம்முடைய ஆதர்ச எழுத்தாளரை நேரில் சந்திக்கும்போது ஆகிய தருணங்களில் எல்லாம் ஏற்படும் நெகிழ்வு ஏற்பட்டது. என்ன தான் ஆங்கில அமர் சித்திரக்கதையைப் பிள்ளைகளுக்கு வாங்கிக் கொடுத்து, விநாயகரை கணேஷா என்றும், இராவணனை ராவணா என்று பிள்ளைகள் படிப்பதைப் பார்த்தாலும் பிள்ளைகள் நம் புராணங்களை நம் தாய்மொழியில் படிப்பதையே நான் விரும்புகிறேன். கும்பகர்ணனின் கதையைப் படித்து குழந்தைகள் சிரித்து சிரித்து குதூகலிக்கும்போது ஆங்கிலத்தில் இதையே அவர்கள் படித்திருந்தால் இந்தளவு அவர்களால் கதையோடு ஒன்றிப்போயிருக்க முடியுமா? என்று தோன்றியது. சந்தேகம்தான்.

சர்வைவலுக்குப் பிற மொழிகள் தேவைதான். ஆனால் மனம் ஒன்றவும், மனம் கரையவும் தாய்மொழியில் படிப்பதாலும் எழுதுவதாலும் மட்டுமே முடியும்.


பி.கு

அருமையான ஏற்பாடுகள் செய்திருக்கும் அமைப்பாளர்கள், அரங்கத்திற்குள் இருக்கும் காபி வெண்டிங் மெஷினின் காபி தரத்தைக் கொஞ்சம் கவனிக்க வேண்டும். நடந்து நடந்து காபி அவசியம் தேவைப்படுகிறது. ஆனால் அந்தக் காபியைக் குடிக்கவே முடியவில்லை. நிறைய பேர் பாதி கப்பில் குப்பையில் போட்டுவிட்டனர் - நான் உட்பட.





Thursday, January 5, 2012

இஞ்சிக்கு பேட்டன்ட் - இங்கிலாந்து கம்பெனி வாங்கிய பல்பு

இங்கிலாந்தைச் சேர்ந்த நிக்கோலஸ் ஜான் லார்கின்ஸ் என்ற கம்பெனி நுரையீரல் மற்றும் சுவாசக்கோளாறுகளுக்கான ட்ரீட்மெண்ட்டில் இஞ்சியின் பயன்பாட்டைத் தாங்கள் கண்டுபிடித்திருப்பதாகவும், அது தங்களுடைய அரிய கண்டுபிடிப்பு என்பதால் அதற்கு பேட்டன்ட் வழங்க வேண்டும் என்றும் யு.கே. பேட்டன்ட் அலுவலகத்தில் பதிவு செய்துள்ளது.


இந்தியாவில் தலைமுறை தலைமுறையாக இருமலுக்காகவும், ஜலதோஷத்துக்காகவும் நாம் இஞ்சியை வெவ்வேறு வடிவங்களில் சாப்பிட்டு வருகிறோம். வீட்டில் நமக்கு இருமல் இருந்தால் சின்ன வயசில் அம்மாவின் இஞ்சிக் கஷாயம், கொஞ்சம் பெரியவர்கள் ஆனவுடன் டீன் ஏஜ் ஸ்டேஜில் கஷாயம்லாம் குடிக்க முடியாது என்று சொல்லும் பருவத்தில் சரி இஞ்சி டீயாவது குடி என்பார்கள் தாய்மார்கள். அப்புறம் இஞ்சி மொரப்பா என்று ஒரு இஞ்சி மிட்டாய், மும்பையில் அட்ரக் சாய் என்ற பெயரில் இஞ்சி டீ- சளித்தொல்லைக்காக இவற்றையெல்லாம் காலங்காலமாக நாம் சாப்பிட்டு வருகிறோம். இதற்கு பேட்டன்ட் கேட்டு விண்ணப்பிப்பது ஒரு அன்னிய நாடு.

நல்ல வேளை - சரியான சமயத்தில் (அதாவது பேட்டன்ட் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட இரண்டே வாரத்தில்) இந்திய CSIR மற்றும் Dept. of Ayush தலையிட்டு இந்தியாவின் பாரம்பர்ய மருந்து இது என்பதை 18ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆயுர்வேத மற்றும் யுனானி மருத்துவப்புத்தகங்களை ஆதாரமாகக் கொண்டு விளக்கியிருக்கிறது. அதனால் பேடன்ட்டும் மறுக்கப்பட்டுள்ளது.

கொஞ்சம் உஷாரா இல்லன்னா நம்ம இட்லி, பொங்கல், மண்பானை எல்லாத்துக்கும் பேட்டன்ட் வாங்கிடுவானுங்க போல

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes